காரைக்குடி உட்கோட்ட போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் பள்ளத்தூர் கோட்டையூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில், கொலைக்காக ஆயுதங்களை வைத்திருந்த நான்கு பேரை கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் காரைக்குடி பகுதியில் மார்ச் 18 அன்று நடைபெறவுள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பழிவாங்கும் நோக்கில் ஒரு கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள்:
1. அகிலன் (23), கரைக்குடி
2. பாண்டியன் (25), புதுக்கோட்டை மாவட்டம்
3. விஸ்வநாதன் (20), கரைக்குடி
4. வெங்கடேசன் (26), கரைக்குடி
கொலைத் திட்டத்தின் பின்னணி
இந்த கொலைத் திட்டம் 2019-ஆம் ஆண்டு குன்றக்குடியில் நடந்த கொலை வழக்குடன் தொடர்புடையது. 2019-ல் ஆறு பேர் கொண்ட கும்பல் குன்றக்குடியில் ஒரு நபரை கொலை செய்தது.

இதனால் கொலை செய்யப்பட்ட நபரின் நெருங்கிய நண்பரான பாண்டி, பழிவாங்கும் நோக்கில் அந்த கொலை குற்ற வழக்கின் எதிரிகளை கொல்ல ஒரு குழுவை அமைத்துள்ளார். இவர்களை போலீசார் ரகசிய தகவலின் பேரில் கைது செய்துள்ளனர்.
காவல்துறையின் வேகமான நடவடிக்கை காரணமாக, கோவில் திருவிழாவில் நடத்த திட்டமிடப்பட்ட ஒரு கொலை சம்பவம் தடுக்கப்பட்டது. மேலும், இந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்களை பிடிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட எஸ் பி ஆஷிஷ் ராவத், “பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் செயல்களில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என தெரிவித்துள்ளார்.