ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 73.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக கொள்கை பரப்பு துணை செயலாளாருமான பி.ஆர்.சுந்தரம் இன்று காலமானார்
அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பி.ஆர்.சுந்தரம், அக்கட்சியின் மாவட்ட அவைத்தலைவராக பதவி வகித்தவர். 1996 முதல் 2006 வரை இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் 2014 முதல் 2019 வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தவர்.
கடந்த 1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தபோது, அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நான்கு பேரில் இவரும் ஒருவர். அதேபோல், கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு, 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.
அதிமுகவில் நீண்ட காலம் பயணித்த பி.ஆர்.சுந்தரம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். பின்னர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பணியாற்றினார். பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.