கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னைக்கு வர வேண்டிய 16 விமானங்கள் பிற பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டன. விமான நிலைய ஓடுபாதையில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.
விமான நிலைய ஓடுபாதை பகுதியில் இருந்து மழைநீர் வெளியேறும் கால்வாயை தொடர்ந்துகண்காணித்து நீர் தேங்காதபடி வெளியேற்ற கூடுதல் ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். தேவையிருந்தால் அந்தந்த விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை புயல் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, கோவை, மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு சென்று நிறுத்திக் கொள்ளலாம்.
சென்னை விமான நிலையத்தில் தங்கியுள்ள பயணிகள், விமானநிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் உட்பட சென்னை விமான நிலையத்தை சார்ந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான உணவு, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மின்தடைகள் ஏற்பட்டால், அவசர தேவைக்கு தேவையான, ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சென்னை விமான நிலையத்தின் பின்பகுதியில் ஓடும் அடையாறு ஆற்றின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகள் பெறப்பட்டு, உடனடியாக, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். அதற்கேற்ப விமான நிறுவனங்கள், தங்களது விமான இயக்கம்பற்றி முடிவு செய்து கொள்ளலாம். விமான நிலையத்தில் உள்ள அனைத்து தரப்பு ஊழியர்களும் விடுப்பு இல்லாமல் பணிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.