

முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்.
நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் காட்டு தீ பரவாமல் இருக்க தீத்தடுப்பு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் ஆசியாவிலேயே புலிகள் அதிகமாக காணப்படுகிறது. இங்கு புலிகள் மட்டுமின்றி காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டு எருமைகள், பல்வேறு வகையான மான்கள், முதலைகள், பல்வேறு வகையான பறவைகள், உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இது தவிர விலை உயர்ந்த தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன.

ஆண்டு தோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நீலகிரியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். இச்சமயங்களில், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் சிறிய மரங்கள் காய்ந்து போய் விடுகின்றன.

அதேபோல் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை இப்பகுதியில் மழையும் குறைந்து காணப்படும் நிலையல் இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் காய்ந்து விடுவது வழக்கம். இதனால், இங்கு வாழும் விலங்குகள் நீரின்றி நீர் நிலைகளை நோக்கி இடம் பெயருவது வழக்கமாக உள்ளது. இம்முறையும் வழக்கம் போல் அதிக பனிப்பொழிவாலும் மழை பொய்த்த காரணத்தினாலும், தற்போது முதுமலை முழுவதும் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பெரும்பாலான வன விலங்குகள் தற்போது முதுமலையை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர துவங்கி விட்டன. மேலும், புலிகள் காப்பகம் காய்ந்து போய் உள்ள நிலையில், தற்போது காட்டு தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

