• Tue. Mar 25th, 2025

இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

2 கொரோனா தடுப்பூசிகளையும் அவசர தேவைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மோல்நுபிரவிர் மருந்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல் அளித்துள்ளார். மேலும் 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பல்வேறு தரப்பினர் வலியுறுத்தும் ஃபைசர், மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள கோர்பிவேக்ஸ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட புரத அடிப்படையிலான தடுப்பூசியாகும். நானோ துகள் தடுப்பூசியான கோவோவேக்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மட்டுமே மோல்நுபிரவிர் மாத்திரை பயன்தரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கோவாக்சின் , கோவிஷீல்டு, ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது.