உசிலம்பட்டி பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டுப்பன்றிகளை விரட்ட கண்டுபிடிக்கப்பட்ட நவீன கருவியை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி கோட்டாச்சியர் ரவிச்சந்திரன், வட்டாச்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 58 கிராம கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீரை கடைமடை கண்மாய்கள் வரை கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து இந்த கூட்டத்தில் வேளாண்துறை அலுவலர்கள் ஏற்பாட்டில் தனியார் அமைப்பு சார்பில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட கண்டுபிடிக்கப்பட்ட நவீன கருவியின் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த காட்டுப்பன்றியை விரட்டும் நவீன கருவியை வேளாண்துறை சார்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.