அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில்
அதிமுக, பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேகு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்குமேல் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தற்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் சி.வி.சண்முகம், தம்பிதுரை, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் சென்றுள்ளனர். இரண்டு நாள் பயணமாக அவரது டெல்லி பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்திருப்பதாக பத்திரிகையாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழக சட்டப்பேரவைதேர்தல், அதிமுக, பாஜக கூட்டணி அமைப்பது உள்பட பல்வேறு விவகாரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பை தொடர்ந்து 2026-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில், 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அமையும் என்பது உறுதியாகியுள்ளது.