உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்து வந்த எலான் மஸ்க் அதிக நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என கின்னஸ் பட்டியலில்இடம் பெற்றுள்ளார்.
உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்து வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டுவிட்டரை ரூ.3½ லட்சம் கோடி கொடுத்து வாங்குவதாக அறிவித்தார். அதற்கான நடைமுறைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமானது. டுவிட்டருக்கான தொகையை செலுத்துவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்க தொடங்கினார் எலான் மஸ்க். அதோடு தனது முழு கவனத்தையும் டுவிட்டர் மீது திருப்பியதாலும், 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் உள்பட டுவிட்டர் நிர்வாகத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களைகொண்டு வந்ததால் அவர் மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்ததாலும் டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர். இதனால் கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலரை (சுமார் ரூ.15 லட்சம் கோடி) அவர் இழந்துள்ளார். உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை. இதன் மூலம் மனித வரலாற்றில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என கின்னஸ் பட்டியலில் எலான் மஸ்க் இடம் பெற்றுள்ளார்.