மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முக்கிய அம்சமாக பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அறிக்கை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதனை தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொது செயலாளர்கள் விடியல் சேகர், முனவர் பாட்சா, ராஜம் எம்பி நாதன், சக்தி வடிவேல், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பெற்று கொண்டனர். தமாகா தனது தேர்தல் அறிக்கையில், மழை வெள்ளம் நீர்க்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க வகை செய்ய வேண்டும்.
மழை நீரை தடுத்து பாசனத்திற்கு பயன்படுத்தும் தேசிய அளவிலான நதிகளை இணைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு த.மா.கா. துணை நிற்கும். நமது மாநிலத்தில் ஓடும் நதிகளை இணைத்திடவும் த.மா.கா. தொடர்ந்து குரல் கொடுக்கும். அத்துடன் காவிரி மற்றும் பாலாற்றில் மழை வெள்ள காலங்களில் பல டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்து விடுகிறது.
இதை தடுத்து தடுப்பணைகள் கட்டி மழை வெள்ள நீரை முறையாக பயன்படுத்த வேண்டும். இதனை தொடர்ந்து தமாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே நேரத்தில் சமீப காலங்களில் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். இதனை சட்டவடிவமாக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு த.மா.கா. உறுதியாக துணை நிற்கும் போன்ற 23 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.