• Sat. Apr 27th, 2024

தேர்தல் வாக்குறுதிகளை
தி.மு.க. நிறைவேற்றவில்லை
அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை- அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி- மொரப்பூர் ரயில்வே திட்டம் நிச்சயமாக நிறைவேறும். அதற்காக பொது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என்று தென்னக ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீர் மேலாண்மையை நிறைவேற்ற 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். இதற்காக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை முதல்வர் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆணைமடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தி.மு.க.வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தனர். அவர்கள் ஆட்சி பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மேலும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக கொண்டு வருவோம் என தெரிவித்தனர். ஆனால் 10 மதுக்கடைகளை கூட மூடவில்லை. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அடுத்த கல்வியாண்டிற்குள் தமிழக அரசு சட்டசபையில் சட்டமாக இயற்றும் என நம்புகிறோம். வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும். அதற்கேற்றவாறு வியூகங்களை 2024 எம்.பி தேர்தலின்போது அமைப்போம். எம்.பி தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு எங்களது முடிவை அறிவிப்போம். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *