அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களில் 95 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கடந்த ஜூலை 11-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அன்றைய கூட்டத்திலேயே அடுத்த 3 மாதங்களுக்குள் பொதுச் செயலாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. அதே போல் கட்சி அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதையடுத்து குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும். மேலும் 5 வருடம் தலைமை கழக நிர்வாகியாக இருந்திருக்க வேண்டும். 15 வருடமாக கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வாகிறார்
