“தமிழகத்தில், பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்குபவர்கள், விற்பவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்ய வேண்டாம்” என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பனை மரம், தென்னை மரத்திலிருந்து பதநீர் இறக்குவது, பனை வெல்லம் தயாரிப்பது போன்றவை சட்டபூர்வமான செயல்கள். இதற்கு அரசு பனை வெல்ல கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. இந்த இயற்கை குளிர்பானம் சாலையோரங்களிலும் விற்கப்படுகிறது.இந்நிலையில், சில போலீஸ் ஸ்டேஷன்களில் இந்த வேளாண் பணியை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாகவும், கைது செய்வதாகவும், தொழிலாளர்களை துன்புறுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன.பதநீர் இறக்குபவர்கள், பனை வெல்லம் தயாரிப்பவர்கள், இது சார்ந்த பணி மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.