• Fri. Mar 29th, 2024

அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த தி.மு.க எம்.பி..!

Byadmin

Jun 14, 2022

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையை, திமுக மூத்தத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சனம் செய்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக, கே.அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்து வருவதுடன், திமுக மீதும், நிர்வாகிகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் தெரிவித்து வருகிறார். தொடர்ந்து, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார். இப்படி அண்ணாமலை தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்களும், திமுக நிர்வாகிகளும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, நாசர், முத்துசாமி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு தினமும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக மூத்தத் தலைவர் ஆர்.எஸ்.பாரதி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், “நான் கேஸ் போட்டா நீ உள்ளே போக வேண்டியது வரும். என் ஜாதகம் ரொம்ப மோசமானது. ஏதோ நம்ம பையன் சின்னப் பையன் என்பதற்காக விட்டு வைத்திருக்கிறோம்” என்று எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இதற்கு, அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை, ஆர்.எஸ்பாரதி அவர்களே! மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. ஆதலால் சாதி வெறுப்பை விதைப்பதற்கு முயற்சி செய்து, காலம் கடத்திக் கொண்டு இருக்கின்றீர்கள். பாவம்! இது 1967 அல்ல!” என குறிப்பிட்டு உள்ளார்.
கிருபானந்த வாரியாருக்கு ஏற்பட்ட கதி தான் அண்ணாமலைக்கும் ஏற்படும். இது போல் பேசிக் கொண்டிருந்தால் இனி நடமாட முடியாது. எங்கேயும் சென்று பேச முடியாது என்று, ஏற்கனவே, ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *