சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மழைக்கால கூட்டத் தொடர் நிறைவு நாளில் அறிமுகப்படுத்திய 3 சட்டங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தொண்டி புதைக்கும் மிக மோசமான சட்டங்களாகும். 30 நாட்கள் விசாரணை கைதியாக இருந்தால் போதும் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியில் இருப்பவர்களை நீக்க முடியும் சட்ட மசோதா. இதை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்ததால் நாடாளுமன்ற கூட்டு குழுவிற்கு அனுப்பி உள்ளனர். பாசிசத்தின் உச்சம் என்று சொல்ல கூடிய வகையில் சட்டங்களை பா.ஜ.க. அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே சி.ஏ.ஏ., என்.சி. ஆர்., என்.பி.ஆர்., போன்ற சட்டங்களை அறிமுகப்படுத்தினார்கள். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றம் செய்தார்கள். ஆனால் அதை நடைமுறைப்படுத்த முடியாத நிலை உச்ச நீதிமன்றத்தால் ஏற்பட்டது. அதில் இருந்து ஒரு படிப்பினை பெற்று கொள்ளாமல் மோசமான கருப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான பாசிச தாக்குதல். நாட்டு மக்கள் விழித்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கிறார்கள். தமிழ்நாடு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பீகாரில் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அம்பலமாகி உள்ளது. ராகுல்காந்தி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி உள்ளார். கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் வலியுறுத்தியும் அரசு அதை ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவில்லை. விவாதிக்க முன் வரவில்லை. கடும் எதிர்ப்புக்கு இடையில் சில மசோதாக்களை சட்டங்களாக்கி உள்ளனர். மக்கள் விரோத சட்டங்களை அறிமுகப்படுத்த கூடிய மழை கால கூட்ட தொடராக அமைந்து உள்ளது. பா.ஜ.க். அரசு பாசிச அரசு என்பதை உறுதிப்படுத்த கூட்ட தொடர் சான்றாக அமைத்து உள்ளது.

அமீத்ஷா தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகிறார். தமிழ்நாட்டில் தாமரை மலரும் என குறி சொல்கிறார். திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியை வீழ்த்துவதுதான் வேலை என சவால் பேசுகிறார். புதிதாக தோன்றுகிற கட்சிகளாக இருந்தாலும் பழைய கட்சிகள், பா.ஜ.க போன்ற கட்சிகளும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வீழ்த்த வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர். தமிழ்நாடு மண்னில் அவர்களின் சதி முயற்சி வெற்றி பெறாத உரிய நேரத்தில் மக்கள் உணர்த்துவார்கள்.
த.வெ.க. நடத்திய 2வது மாநாடு வெற்று கூச்சலுக்கு ஆரவாரத்துக்கும் அடையாளமாக இருந்தது. உருப்படியான எந்த வித கொள்கை கோட்பாடு இல்லை. ஆக்கப்பூர்வமான செயல் திட்டம் இல்லை. திமுக வெறுப்பு என்பதே அந்த மேடையில் உமிழ்ந்த அரசியல். ஆட்சிக்கு வருவோம் என்று ஆர்பரித்த பகல் கனவை கூச்சலாக முழங்கிய முழக்கமாக இருந்தது. 2 மாநாடு நடத்தியும் கட்சி கொள்கைகள் என்னவென்று த.வெ.க. வினருக்கே புரியவில்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இத்தனை லட்சம் பேரை திரட்டி வெறும் சவால்களை முன் வைத்து உள்ளார். திமுக வெறுப்பை மட்டுமே உமிழ்ந்து உள்ளார். விஜய் பேச்சில் ஆக்கப்பூர்வமான கருத்தும் கருத்தியலும் இல்லை.
அம்பேத்கார் கொள்கை என்ன என்று மேடையில் ஒருவராவது பேசியது உண்டா. பெரியார் கொள்கை என்ன என்று பேச்சில் வெளிப்பட்டதா மாநாட்டில் பேசியவர்கள் சவால் அடித்தார்கள். ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற வேட்கையை வெளிப்படுத்தினார்கள். திமுக எதிராக பேசினார்கள். அவர்களது கொள்கை ஆசான்களின் எதையும் பேசவில்லை.