மதுரையில் கழிவுநீர் வெளியேறுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பக்கத்து வீட்டு இளைஞரை வெட்டிக் கொலை செய்த வாலிபர் கைது.
மதுரை மாடக்குளம் பகுதியிலுள்ள தானத்தவம் தெருவில் எதிரெதியே உள்ள வீடுகளில், தனியார் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றும் ஜெயக்குமார் (வயது 21) மற்றும் ஓட்டுநர் சோனைராஜ் (வயது 40) ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். ஜெயக்குமாரின் தாயும், தங்கையும் அவர்களது வீட்டு வாசலில் வைத்து பாத்திரம் கழுவும் போதும், துணி துவைக்கும் போதும் வெளியேறும் கழிவுநீர் சோனையின் வீட்டின் வாசலில் வந்து தேங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜெயக்குமாருக்கும் சோனைக்கும் கடந்து சில மாதங்களாக வார்த்தை மோதல் நிலவி வந்துள்ளது. நேற்று இரவு மீண்டும் கழிவு நீர் வெளியேறிய போது ஏற்பட்ட வார்த்தை தகராறு, கைக்கலப்பு வரை சென்ற நிலையில், ஆத்திரமடைந்த சோனை வீட்டிலிருந்து அரிவாளால் ஜெயக்குமாரை அவர் வீட்டு வாசலில் வைத்து வெட்டிக்கொலை செய்துள்ளார். ஜெயக்குமார் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்கு பதிவு செய்து சோனையை கைது செய்தனர்.