உசிலம்பட்டி அருகே கழிவுநீர் வடிகால் மற்றும் சாலை வசதி அமைத்து தர கோரி கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பேச்சியம்மன்கோவில்பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் முறையான சாக்கடை வடிகால் மற்றும் சாலை வசதிகள் இல்லை என கூறப்படுகிறது. பலமுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்காததைக் கண்டித்து கிராம மக்கள் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் முறையான சாக்கடை மற்றும் சாலை வசதி செய்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.