சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் 74 ஏக்கர் பரப்பளவில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு நறுமணப் பூங்கா (ஸ்பைசஸ் பார்க்) கட்டி முடிக்கப்பட்டது. வாசனைப் பயிர்களான மிளகாய், மல்லி, மஞ்சள், இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு முதலியவற்றைப் பொடியாக்கி, மதிப்புக்கூட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் பேக்கிங் செய்து, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. சிவகங்கையில் அமைந்துள்ள இந்த நறுமணப் பூங்காவால் திருச்சி முதல் கன்னியாகுமரி வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான விவசாயிகள் பயன்பெறுவதாக சொல்லப்படுகிறது. ஆனால் தொடர்ந்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் இந்த நறுமண பூங்கா திறக்கப்படாமல் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது சில வருடத்திற்கு முன் திறக்கப்பட்டு செயல்பட்ட வருகிறது. இந்த சூழலில் முத்துப்பட்டி நறுமண பூங்காவில் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்குவதற்கான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் தொழில் தொடங்குவதற்கு விரைந்து அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.