சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் அரசு பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் சென்னையில் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் பங்கேற்று இரண்டாம் பரிசை வென்று திரும்பிய நிலையில் அவர்களுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் காஞ்சிரங்கால் பஞ்சாயத்து தலைவர் மணிமுத்து சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தி அதில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் கொண்ட குழுவினர் மாநில அளவிலான கலை திருவிழாவில் பங்கேற்று கிராமிய கலைகள் என்கிற தலைப்பில் பாரம்பரிய நடனமான கரகம், காவடி, சிலம்பம், பறையிசை, கொம்புவாத்தியம் உள்ளிட்டவைகளை இசைத்தும் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தினர். இவர்களுக்கான பரிசளிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் இன்று காலை சொந்த ஊர் திரும்பிய மாணவ, மாணவியர்களை கிராம பொதுமக்கள், ஆசிரியர்கள் இனைந்து உற்சாக வரவேற்பளித்தனர். முன்னதாக தலைமையாசியர் பாண்டிராணி, காஞ்சிரங்கால் பஞ்சாயத்து தலைவர் மணிமுத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கணிப்புகள் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் மாலை அனிவித்தும், பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும், பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களுக்கு மலர் தூவியும் வரவேற்றனர். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.