• Mon. Feb 2nd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பட்டப்பகலில் அமமுக வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வியாழக்கிழமை பட்டப்பகலில் தனது அலுவலகத்தில் இருந்த அமமுக வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகியை கும்பலாக வந்த நான்கு பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தை சேர்ந்த வழக்கறிஞர் குரு.முருகானந்தம், மானாமதுரை சிவகங்கை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளில் ஆஜராகி வாதாடி வருகிறார். மேலும் அமமுக மாநில வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார் .

இந்நிலையில், மானாமதுரை சி.எஸ்.ஐ வளாகம் எதிரே உள்ள தனது அலுவலகத்தில் முருகானந்தம் தனது தொழில் சார்ந்த கட்சிக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தார் . அப்போது முருகானந்தத்தின் அலுவலகத்திற்குள் நுழைந்த  4 அடையாளம் தெரியாத நபர்கள்,  அவரை சரமாரியாக வெட்டிவிட்டு, தாங்கள் வந்த இருசக்கர வாகனத்திலேயே தப்பிச் சென்றனர்.

இச்சம்பவத்தில் முருகானந்தத்திற்கு தலை ,கை உள்ளிட்ட இடங்களில் படுகாயம் காயம் ஏற்பட்டது.  இச்சம்பவத்தை பார்த்த அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது .

இவரை வெட்டியவர்கள் யாரென்று அடையாளம் காண முடியாததால் மானாமதுரை போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து அடையாளம் நபர்களை தேடி வருகின்றனர் .