கோவை, சாய்பாபா காலனி பகுதியில் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த இருவர், எதிர்பாராதவிதமாக 40 அடி ஆழமுள்ள மாநகராட்சி கழிவுநீர் வெளியேற்றும் நிலையத் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் குமார் மற்றும் பாப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் சுரேஷ் குமார் ஆகிய இருவரும் மோட்டார் வால்வு மாற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது நிலைதடுமாறி அர்ஜுன் குமார் முதலில் தொட்டிக்குள் விழ, அவரைக் காப்பாற்ற முயன்ற சுரேஷ் குமாரும் நிலைதடுமாறி உள்ளே விழுந்து (மூச்சுத்திணறல்) ஏற்பட்டு உயிரிழந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து இன்று காலையிலேயே நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படும் நிலையில், இதுகுறித்த தகவல் இரவு 6 மணி அளவிலேயே அதிகாரப் பூர்வமாகத் தெரியவந்து உள்ளது. 40 அடி ஆழம் கொண்ட அந்தத் தொட்டி முழுவதும் கழிவுநீர் நிரம்பி உள்ளதால், உடல்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தற்போது சாய்பாபா காலனி காவல்துறையினர், கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து லாரிகள் மூலம் கழிவுநீரை வெளியேற்றும் ‘ரெஸ்க்யூ’ (மீட்பு) பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கழிவுநீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட பின்னரே உடல்களை மீட்க முடியும் என்பதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.



