தேனி மாவட்டம் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (14.09.2026) மதியம் பெய்த கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறியது.

இந்நிலையில் சின்னமனூர் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த ஆழமான பள்ளத்தில் மேய்ச்சலுக்கு சென்ற மாடு ஒன்று தவறி விழுந்தது. மழை நீர் பள்ளத்தில் நிரம்பி இருந்ததால் பள்ளம் இருப்பது தெரியாமல் மாடு விழுந்ததாக கூறப்படுகிறது. பள்ளத்தில் சிக்கிய மாடு வெளியே வர முடியாமல் தவித்து கொண்டிருந்தது.
இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் கயிறு கட்டி போராடி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாட்டை பத்திரமாக மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. .

மழை நேரத்திலும் விரைந்து வந்து உயிரை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு, உதவிய பொதுமக்களுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் மழைக்காலங்களில் சாலை ஓரங்களில் உள்ள பள்ளங்களை மூடவும், தடுப்பு வேலிகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








