• Sat. Apr 27th, 2024

கோடம்பாக்கத்தில் கலக்கும் கொரோனா!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு, மிகவும் குறைந்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மூன்று மடங்காக அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி 2 ஆயிரத்தில் இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,944 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

அதிவேகமாக பரவி வரும் கொரோனா தொற்று, இந்த முறை திரைபிரபலங்கள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! ஆண்டு இறுதியில், வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது! பின் 2022 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனாவில் இருந்து வீடு திரும்பினார்!

அவரைத்தொடர்ந்து,

அருண் விஜய்:

ஜனவரி 5ம் தேதி, நடிகர் அருண் விஜய் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்!

இது குறித்து அவரது பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மருத்துவரின் அறிவுரைப்படி அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன். அனைவரது அன்புக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார்!

மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா!

ஜனவரி 6ம் தேதி, நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக, மீனா தனது இன்ஸ்டா பக்கத்தில் உறுதி செய்திருந்தார்!

இது தொடர்பாக அவர் தனது பதிவில், ‘2022ஆம் ஆண்டில் என் வீட்டுக்கு வந்த முதல் விருந்தாளி, மிஸ்டர் கொரோனா! என் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் அதற்குப் பிடித்துவிட்டது. ஆனால், நான் அதைத் தங்கியிருக்க அனுமதிக்க மாட்டேன். கவனமாக இருக்கவும் மக்களே. பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்!

இசையமைப்பாளர் தமன்!

இசையமைப்பாளர் தமன், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ”இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும்.” என்று குறிப்பிட்டுள்ளார்!

த்ரிஷா!

ஜனவரி 7ம் தேதி, நடிகை த்ரிஷா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ”அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் சற்று முன்பு எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து அறிகுறிகளும் எனக்கு ஏற்பட்டன. அது எனக்கு மிகவும் அழுத்தம் மிகுந்த வாரமாக இருந்தாலும் தடுப்பூசிகள் காரணமாக இன்று நான் குணமடைந்து வருகிறேன். என்னுடைய பரிசோதனைகளை முடித்து மீண்டும் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த என்னுடைய மிகச்சிறந்த குடும்பத்துக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. என்று கூறியுள்ளார்!

சத்யராஜ் மற்றும் ப்ரியதர்ஷன்!

இந்நிலையில் இன்று (ஜனவரி 8) நடிகர் சத்யராஜுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்!

அதேபோல பிரபல இயக்குநர் பிரியதர்ஷனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோலிவுட் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் இரண்டையும் விட்டுவைக்கவில்லை கொரோனா!

மகேஷ் பாபு:

ஜனவரி 6ம் தேதி, முன்னணி தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவுக்கு தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவரது பதிவில், “தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும் எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னோடு தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசி போடாதவர்கள் அனைவரும் உடனடியாக போட்டுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்!

ஸ்வரா பாஸ்கர்

ஜனவரி 7ம் தேதி, பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜன.5 அன்று எனக்கு அறிகுறிகள் ஏற்பட்டன. பரிசோதனை முடிவுகளும் அதனை உறுதி செய்துள்ளன. 5ஆம் தேதி மாலை முதல் நானும் என் குடும்பத்தினரும் எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நான் எடுத்துக் கொண்டேன். இந்த வாரம் நான் சந்தித்த அனைவரிடமும் இந்தத் தகவலைச் சொல்லிவிட்டேன். ஆனால், என்னுடன் யாராவது தொடர்பில் இருந்திருந்தால் தயவுசெய்து அவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும்”. என்று குறிப்பிட்டுள்ளார்!

தொடர்ந்து பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வரும் நிலையில், சினிமா தொடர்பான வெளியீடுகளும், வேலைகளும் பாதிக்கப்படுவதால், திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *