இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பேரலை 2-வது அலையோடு முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்த மக்களுக்கு மீண்டும் பீதியை கிளப்பும் விதமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஹரியானா போன்ற மாநிலங்களில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கர்ப்பிணிகள், முதியோர் மாஸ்க் அணிவது கட்டாயம். தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 1000ஐ தாண்டினால் மாஸ்க் கட்டாயமாக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இந்நிலையில், இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிப்பின் படி ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,158 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 44,998- ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.