புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் இரவு, பகலாக நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடவில்லை என்றால் கைது செய்ய நேரிடும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
கண்ணீர் விட்டு கதறிய ஆசிரியர்கள், 6 பெண் ஆசிரியர்கள் திடீர் மயக்கம், அரசு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி 300 ஆசிரியர்கள் தொடர்ந்து நான்கு நாட்களாக இரவு, பகலாக சட்டமன்றம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விரத்தியோடு கடும் மன உளைச்சலில் மன அழுத்தத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம், காவல்துறை மற்றும் தாசில்தார் பிரித்வி நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது ஆசிரியர்களின் போராட்டம் சம்மதமாக கோரிக்கைகளை வலியுறுத்த திங்கள்கிழமை முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், எனவே அது வரை போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டத்தை கைவிடாத பட்சத்தில் கைது செய்து, வழக்கு பதிவு செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இதனால் அனைத்து ஆசிரியர்களும் கதறி அழுதனர். இதில் 6 பெண் ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து, சுருண்டு விழுந்தனர். உடனடியாக சக ஆசிரியர்கள் அவர்களை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆசிரியர்களின் போராட்டக் களம் போர்க்களமாக காட்சியளித்தது. தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




