ஆந்திராவில் இருந்து ஒரு கண்டெய்னர் லாரியில், தலா ரூபாய் 50 ஆயிரம் விலை மதிப்புள்ள 28 மாடுகளை விற்பனைக்காக தேனி மாவட்டம், கம்பத்திற்கு செம்பட்டி வழியாக ஏற்றி சென்றனர்.

லாரியை கம்பத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ரியாஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த, வத்தலகுண்டு சாலையில் வீரசிக்கம்பட்டி பிரிவு அருகே இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, கண்டெய்னர் லாரியில் இருந்த மாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டு லாரிக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால், கண்டெய்னர் லாரி நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த 10 அடி ஆழம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான 10 பேர் கொண்ட தீயணைப்புதுறையினர் 2 ஜேசிபி இயந்திரம் வண்டி உதவியுடன் கண்டெய்னர் லாரிக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி 25 மாடுகளை காயங்களுடன் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரிக்கும் சிக்கி 3 மாடுகள் உயிரிழந்தன. மாடுகளை மீட்கும் போது தீயணைப்புதுறையைச் சேர்ந்த அழகுராஜா என்பவரை மாடு உதைந்து காயம் ஏற்பட்டு, அவர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து செம்பட்டி காவல்துறையினர், ஆந்திராவில் இருந்து கம்பத்திற்கு மாடுகளை எதற்காக கண்டெய்னர் லாரியில் அடைத்து வைத்து ஏற்றி சென்றனர் என, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



