படிக்கட்டில் தொங்கிய விவகாரம், பள்ளி மாணவர்கள் போக்குவரத்து பணியாளர் இடையே மோதல்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மேலூர் செல்வதற்கு பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. பெரியார் பேருந்து நிலையத்தில் பயணிகள் ஏறும் பொழுது மாணவர்கள் படியில் தொங்கியவாறு வந்துள்ளனர். இதனை பலமுறை நடத்துனர் கண்டித்தார்.
மாணவர்கள் பேருந்தின் உள்ளே வருவதற்கு மறுத்த நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் பேருந்து மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தடைந்தது. அங்கு ஓட்டுனருக்கும் மாணவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை முற்றி மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர்கள் ஓட்டுநரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.