கோவை வணிகவரித்துறை உதவி ஆணையர் மகேஸ்வரி, தனது கணவர் மூலம் 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நிலையில் கணவன்- மனைவி இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

கோவை வணிகவரித்துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவரிடம் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரியும் அபினேஷ் என்பவர் நிறுவனத்தின் சார்பில் அதிகமாக செலுத்திய input tax யை திரும்பி பெற விண்ணப்பித்து இருந்தார். இந்த பைலை முடித்து கொடுக்க ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி ஆணையர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என அபினேஷ் தெரிவித்த நிலையில், இறுதியாக 60 ஆயிரம் ரூபாய் என பேரம் பேசி முடிக்கப்பட்டது.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில் அபினேஷ் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் ரசாயன பொடி தடவிய பணத்துடன் அபனேஷ் சென்றுள்ளார். அப்பொழுது உதவி ஆணையர் மகேஸ்வரி , தனசேகரன் என்பவரின் என்னை கொடுத்து அவரிடம் பணத்தை கொடுக்கும் படி தெரிவித்துள்ளார். கொடிசியா மைதானம் அருகில் தனசேகரன் இருப்பதாக தெரிவித்த நிலையில் , அங்கு சென்ற அபினேஷ் பணத்தை அவரது காரில் ஏறி அமர்ந்து பணத்தை கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனசேகரனை பிடித்து விசாரித்த பொழுது அவர் உதவி ஆணையர் மகேஸ்வரியின் கணவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனசேகரனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் உதவி ஆணையர் மகேஸ்வரி மற்றும் தனசேகரன் ஆகிய இருவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.










