கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று காலை, கோவை அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது மனைவி சின்மதியுடன் வந்தார். பொதுமக்களுடன் வரிசையில் நின்ற அவர் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கோவையில் பொதுமக்கள் சிரமமின்றி, பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு செலுத்த வரும் வாக்காளர்கள் ஒரு புதுமையான அனுபவத்தை பெறும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் பொலிவுபடுத்தப்பட்டு உள்ளன.
ஒரே மையத்தில் பல்வேறு வாக்குச்சாவடி மையங்கள் அமைந்திருப்பின் அங்கு, பிங்க், நீலம் உள்ளிட்ட வண்ணங்கள் மூலம் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. முதல்முறை வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்ய வர வேண்டும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 6 மணிக்கு வரும் பொதுமக்களுக்கும் டோக்கன் விநியோகிக்கப்படும். அதன் மூலம் அவர்களும் வாக்கு செலுத்த முடியும்” என்றார்




