கோவை பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
பி.எஸ்.ஜி அண்டு சன்ஸ் அறநிலையத்தின் தலைவர் கார்த்திகேயன் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் முன்னாள் மாணவர்களான அமெரிக்க தொழிலதிபர் கோபால் சடகோபால், கல்பர் இன்ஜினியரிங் மற்றும் கான்டிரேக்டிங் எமிரேட்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர், சி.எஸ்.ஐ.ஆர். முதன்மை விஞ்ஞானி மற்றும் ஆலோசகர் பாரிவள்ளல், ஹெலிக்ஸ் ஓபன் ஸ்கூல் லெர்னிங் சென்டர் இணைச் செயலர் சசிகலா ஆகியோருக்கு சிறந்த முன்னாள் மாணவர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், பள்ளியின் நூற்றாண்டு மலரும் வெளியிடப்பட்டது.
மேலும் நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், “சாதி, இனம், மதம், பொருளாதார நிலை என எந்த பாகுபாடுமின்றி அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கி, சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதே ‘சர்வஜன வித்யா சாலை’ தொடங்கியதன் முக்கிய நோக்கம். பி.எஸ்.ஜி.யின் தாய் நிறுவனமான இந்த அறநிலையத்தின் கீழ் தற்போது 30க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன.
மேலும் கோவையில் தாய்மொழியில் கற்பித்தல், இருபாலர் பள்ளி மற்றூம் தொழில்முறைக் கல்வி ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதில் இப்பள்ளி முன்னோடியாகத் திகழ்கிறது. ரவீந்திரநாத் தாகூர் இப்பள்ளிக்கு வருகை தந்து, காலை பிராத்தனைக் கூட்டத்தில் ‘ஜன கண மன’ பாடலைப் பாடினார். அதுவே பள்ளியின் பாடலாகி, பின்னர் நமது தேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது,” என்றார்.
காந்தி பாராட்டிய ‘சர்வஜன’
மேலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் சிந்தனையின் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசுகையில், “சுதந்திரத்திற்கு முன்பே, கல்வி குறித்த கருத்து பரிமாற்றங்கள் இல்லாத காலத்திலேயே கோவையின் கல்வி வளர்ச்சிக்கு பி.எஸ்.ஜி. அறநிலைய நிறுவனர்கள் அடித்தளமிட்டனர்.
மகாத்மா காந்தி, ‘சர்வஜன’ என்ற பள்ளியின் பெயரைக் கேட்டபோது, “எவ்வளவு அழகான பெயர்!” என்று வியந்தார். மேலும் அவர், “சர்வஜன சுகினோ பவந்து” (அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்) என்று இப்பள்ளியை ஆசீர்வதித்தார். கடந்த 101 ஆண்டுகளாக, இப்பள்ளி ஒரு தெளிவான நோக்கத்துடன் வருங்கால தலைமுறைக்கு மிகச் சிறந்த சேவையை ஆற்றி வருகிறது,” என்றார்.