• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படும் தென்னை – உலகத் தேங்காய் நாள் (world coconut day) (செப்டம்பர் 2)…

ByKalamegam Viswanathan

Sep 2, 2023

உலகத் தேங்காய் நாள் ( world coconut day ) செப்டம்பர் 2 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1998ஆம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற இந்தோனேசியாவின் ஜகார்த்தாவைத் தலைமையகமாகக் கொண்ட ஆசிய பசிபிக் தெங்கு குழும மாநாட்டில் செப்டம்பர் 2 ஆம் தேதி உலக தேங்காய் நாளாக அறிவிக்கப்பட்டது. வறுமைக் குறைப்பில் உயிர்நாடியாக விளங்குகின்ற தெங்குப் பயிரின் முக்கியத்துவம் தொடர்பாக மக்களிடையே அதிக விழிப்புணர்வினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இந்நாள் அறிவிக்கப்பட்டது. தென்னையை ‘பூலோகக் கற்பகவிருட்சம்’ என்பார்கள். தருவதில் தாயைப் போன்ற தயாள குணம்கொண்டது தென்னை. தென்னம் பாளை, குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் எண்ணெய் என ஒவ்வொரு நிலையிலும் மனிதருக்கு உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

தென்னை ஓலைகளில் பட்டு வரும் குளிர்ச்சியான காற்று, நம் உடலில் உள்ள சுரப்பிகளைத் தூண்டி நலம் சேர்க்கும். தென்னை ஓலையில் கூரை வேய்வது இதனால்தான். தேங்காய், இனிப்புச் சுவை உடையது. பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளுக்கு இணையான ஊட்டச்சத்து நிறைந்தது. தேங்காய் ஓட்டுக்கும் பருப்புக்கும் இடையே உள்ள தோல் போன்ற பகுதி, கொழுப்பைக் கரைக்கும் தன்மை உடையது. குடலில் உள்ள புழுக்களை நீக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் பயன்படும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயைப்போக்கும். தேள், நட்டுவாக்கலி கொட்டினால் அதன் விஷம், கடுப்பு நீங்கவும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் `சைந்தவலாவனம்’ என்ற மருந்து செய்வதற்கு தேங்காய் முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்து வயிறு உப்புசம், வயிற்றுப்புண், வயிற்றுவலியைக் குணப்படுத்தும்.

இளநீர் குளிர்ச்சியைத் தரவல்லது. தாகத்தைத் தணித்து செரிமானத்தைச் சீராக்கும். சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகப் பாதையைச் சுத்தப்படுத்தும். சிறுநீரகக்கல் பிரச்னை, சின்னம்மை, பெரியம்மை நோய்கள் வராமல் தடுக்கும். கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அம்னியோட்டிக் திரவ (Amniotic fluid) குறைபாட்டை, தொடர்ந்து இளநீர் அருந்துவதன் மூலம் சரிசெய்யலாம். ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா குறைபாட்டைச் சரிசெய்ய இளநீர் உதவுகிறது. தென்னையில் இருந்து வரும் பூவைப் பயன்படுத்தி கஷாயம் செய்து அருந்தினால், அதீத ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் குணமடையும். ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியம் செய்யப் பயன்படுகிறது.

தேங்காய்ப்பால், பசும்பாலுக்கு நிகரான குணம் உடையது. ஆண்மையைப் பெருக்க வல்லது. வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும். தாய்ப்பால் சுரப்புக்கு உதவும். வாதத்தைத் குறைத்து, கபத்தைக் கூட்டும். உடலுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். சருமத்தின் அழகைக் கூட்டும். தேங்காய்ப்பாலைக் காய்ச்சி வடித்து எடுப்பது ‘உருக்கு தேங்காய் எண்ணெய்’ ஆகும். இதைப் பயன்படுத்தி, ஆயுர்வேத மருத்துவத்தில் ‘நீலிபிருங்காதி கேர தைலம்’ தயாரிக்கப்படுகிறது. இது, முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர உதவும். தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் அதிக அளவில் சேச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இதனால், மிகவும் ஆபத்தானது என்று ஒதுக்கப்பட்டது. தேங்காய் எண்ணெய், இதய ரத்தக்குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது என்பது இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது. தேங்காய் எண்ணெய் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது. தற்போது வெளியாகும் ஆராய்ச்சிகளில், தேங்காய் எண்ணெய் நல்ல சமையல் எண்ணெய் எனக் கண்டறிந்துள்ளனர்.

‘இந்தியாவில் இதயநோய் குறைவாக உள்ள மாநிலம் கேரளா’ என்று மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், அங்கு சமையலில் பிரதானமாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படுவதுதான். தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியம், உறுதியை மேம்படுத்தவும் உதவுகிறது. தலைமுடியில் பாக்டீரியா கிருமி வளர்ச்சியைத் தடுக்கிறது. தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், நம் உடலில் பல ஆரோக்கியமான மாற்றங்களைக் காணலாம். நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாவதுடன், சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள் குணமாகும். காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களை அழிக்கும். உடலின் ஆற்றல் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, தைராய்டு சுரப்பியை சீராக செயல்படுத்த உதவுகிறது.
உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரக நோய்களை குணமாக்குகிறது. தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அது செரிமானம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம். தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், அது உடலில் கொழுப்புக்கள் சேர்வதை குறைத்து, பசியை கட்டுப்படுத்தி, உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது. காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. கடுமையான தலைவலி மற்றும் ஆல்கஹால் குடிப்பதன் மூலம் ஏற்படும் உடல் வறட்சி பிரச்சனை தடுக்கப்படுவதுடன், உடலின் நீர்ச்சத்து அதிகமாகும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபட தேங்காய் தண்ணீர் உதவுகிறது.