தேனி அருகே மின்சாரவாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டை கிராமத்தில் உயர் மின் அழுத்த மின் கம்பி, இப்பகுதியில் வீசும் அதிக காற்றின் காரணமாக அங்கிருந்த வீடுகள் மீது உரசியதில் சுமார் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் பயன்படுத்தி வருகின்ற டிவி மற்றும் குளிர்சாதன பெட்டிகள் பழுது அடைந்தன. கடந்த ஒரு வார காலமாக இதே நிலை தொடர்ந்து வருகிறது என்றும் இதனை சரி செய்ய பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் கோபமடைந்த இப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் சாலை மறியல் கைவிடப்பட்டது. உடனடியாக மின்வாரிய அலுவலகத்தில் இருந்தும் சம்பவம் குறித்து ஆய்வு நடத்திச் சென்றனர் .மேலும் இது போன்ற தவறுகள் நடக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாளை மிகப்பெரிய அளவில் சாலை மறியல் நடைபெறும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.