மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை, சாணாம்பட்டியில் சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை ஓடைகரையில் பதினெண் சித்தர்பீட ஆலயத்தில் பதினெண் சித்தர்பீட அறக்கட்டளை சார்பாக,சித்ரா பௌர்ணமியையொட்டி யாகசாலை சிறப்பு பூஜையும், சித்தர்பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது. மதியம் 12 மணிக்கு
அன்னதானமும், இலவச அக்குபஞ்சர், சித்தா, ஆயுர்வேதிக் மற்றும் இயற்கை மருத்துவசிகிச்சை முகாமும் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, திருவள்ளுவர் இலக்கிய மன்ற தலைவர் சு.தனபாலன் தலைமை தாங்கினார். விவசாய விஞ்ஞானி சி.ஆர்.ராஜேந்திரன் அன்னதானத்தை தொடக்கி
வைத்தார். மருத்துவமுகாமினை, திரைப்பட இயக்குநர் மாமல்லன் கார்த்தி தொடக்கி
வைத்தார். முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாக அறங்காவலர் பெ.விஜயபாஸ்கர் வரவேற்றார். இந்த மருத்துவ முகாமில், மருத்துவர்கள் லிங்குசெல்வி தலைமையில் டாக்டர்கள் ஜோதிமுனீஸ்வரி, வித்யா உள்ளிட்ட மருத்துவகுழுவினர் மூட்டுவலி, முதுகுவலி, தலைவலி, கால்ஆணி, சொரியாசிஸ், சளி, ஆஸ்துமா, சர்க்கரை உள்பட அனைத்துவகை நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சையளித்து மருந்து மாத்திரைகள் வழங்கினர். முடிவில், முன்னாள் கூட்டுறவு சங்கத்தலைவர் பொன்ராம் நன்றி கூறினார்.