புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சம்பா,தாளடி மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 5384 விவசாயிகளுக்கு 5 கோடியே 55 லட்ச ரூபாய்க்கான உற்பத்தி மானிய தொகையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார்.

புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தபடும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தற்போது 2024-25 ஆம் ஆண்டில் காரைக்கால் பகுதியில் சம்பா,தாளடி மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 4642 பொது பிரிவு விவசாயிகளுக்கு 4 கோடியே 87 லட்சம் மற்றும் அட்டவணை பிரிவை சார்ந்த 742 விவசாயிகளுக்கு 55-இலட்சம் என மொத்தம் 5 கோடியே 55 லட்சம் ரூபாய் என 5384 விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொறியியல் பிரிவின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதற்கு தேவையான குழாய் வாங்குவதற்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் காரைக்கால் மாவட்டத்தில் வேளாண் துறையில் விண்ணப்பம் செய்து ஆழ்துளை கிணறு அமைத்த 37 பொது பிரிவு மற்றும் அட்டவணை பிரிவுவிவசாயிகளுக்கு மானியமாக 12 இலட்சத்து நாற்பத்து 47 ஆயிரம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊக்கத்தொகைக்கான காசோலை விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்வு கோரிமேடு அப்பா பைத்திய சுவாமி ஆலயத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி விவசாயிகளுக்கு காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார்,வேளாண் இயக்குனர் வசந்தகுமார் மற்றும் காரைக்கால் கூடுதல்வேளாண் இயக்குனர் கணேசன் மற்றும் காரைக்கால்விவசாயிகள் கலந்து கொண்டனர்.






