தீபாவளி பண்டிகை முடிந்து பயணிகள் அனைவரும் சென்னை திரும்பிய நிலையில், சென்னை சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்ததால் பொதுமக்கள் கடும் அவதியைடைந்தனர்.
தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று ஒரே நாளில் அரசு பேருந்துகளில் மட்டும் 79,626 பயணிகள் சென்னை திரும்பிய நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடுமையான நெரிசலில் சிக்கியது. மேலும், அந்த பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கத்தான் கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், அங்கு பேருந்து உள்ளே வரவும், வெளியே செல்லவும் முறையான போக்குவரத்து வசதி செய்யப்படுவதற்கு முன்பு அவசரம் அவசரமாக திறக்கப்பட்டது. இதனால் புதிய பேருந்து நிலையத்தால் போக்குசரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாத நிலையே தொடர்கிறது.
4நாள் தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று சென்னை திரும்பிய மக்களால், நேற்று மாலை முதல் ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் காணப்பட்டு வந்தது. இது நேரம் செல்லச் செல்ல அதிகரித்து நள்ளிரவு தோடர்ந்து இன்று காலை வரை கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையில், வெளியூரில் இருந்து வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் கிளம்பாக்கத்துடன் நிறுத்தப்பட்டதால், அதில் பயணம் செய்த பயணிகள், மாற்று பேருந்து, ஆட்டோ, டிரெயின் போன்றவறை பிடிக்க பேருந்து நிறுத்தத்துக்கு வெளியே இறங்கிச் சென்றனர். இதனால் ஜிஎஸ்டி சாலையில் மக்கள் நெரிசல் காணப்பட்டது. இதனால், சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை எற்பட்டது.
இதுமட்டுமின்றி, செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக போக்குவரத்து நெரிசல் இருந்தால், கட்டணம் வசூலிக்காமலே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு கூறியிருந்த நிலையில், எந்தவொரு சுங்கச்சாவடியும், மாநில அரசின் அறிவுறுத்தலை கண்டுகொள்ளவில்லை. சுங்ககச்சாவடி ஊழியர்கள் கட்டணங்களை வசூலிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
மேலும், கிளம்பாக்கம் அருகே உள்ள பொத்தேரி உள்பட பல்வேறு ரயில் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஏராளமான பயணிகள் இறங்கியதால், அந்த பகுதிகளிலம, பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக சொந்த ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் சென்னை திரும்பும் பொருட்டு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கினர். இதனால், பஸ் நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. நேற்று இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளின் மூலம் 79,626 பேர் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்து பயணித்த பயணிகளின் எண்ணிக்கையில் இது அதிகபட்ச உச்சமாகும்.
சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு இடங்களிலிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துத் துறை சார்பில் வெளியான அறிக்கையில், “தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கத்தில், தீபாவளிப் பண்டிகை முடிந்த பின்னர் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காகவும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும் நேற்று (நவ.3) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, பிற இடங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 2,561 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கு வழக்கமாக இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 3,912 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும் அன்று மட்டும் 79,626 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இது முன்பதிவு செய்து பயணம் மேற்க்கொண்ட பயணிகள் எண்ணிக்கையின் அதிகபட்ச உச்சமாகும்” என்று கூறப்பட்டுள்ளது.