நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பதற்கு நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பாக ரயில்வே அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி வருவதாக நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமிதாப் காந்த் கூறியதாவது:உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. அதனால் உற்பத்தியும், பயன்பாடும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி இந்தியாவில் குறைவாக உள்ளதால் மின்சார வாகனங்களின் விற்பனையும் குறைவாக உள்ளது.இதனால் போக்குவரத்து துறையின் முக்கிய இடமாக கருதப்படும் ரயில் நிலையங்களில் மின்சார வாகனம் சார்ஜிங் உள்கட்டமைப்பை அமைப்பதற்கான வரைவுக் கொள்கையை நிதி ஆயோக் தயாரித்து ரயில்வேயிடம் வழங்கியுள்ளது.
மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு மத்திய அரசின் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்தல் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதனால் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கப்படும்.ரயில்வே அமைச்சகத்துடன் பகிரப்பட்ட வரைவுக் கொள்கையில், 2030-க்குள் ‘பூஜ்ஜிய கார்பன்’என்ற இந்திய ரயில்வேயின் நோக்கத்திற்கு ஏற்ப சார்ஜிங் வசதிகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
123 ரயில் நிலையங்களில் உடனடியாக இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்றார்.