வெப்ப சலனம் குறைந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், இன்று முதல் அடுத்து வரும் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் நேற்று துவங்கியது.
அதே போன்று நாளை ஜான் 1ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரையிலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சிராப்பள்ளி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. ஜூன் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4ம் தேதியும், ஜூன் 5ம் தேதியும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
