• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Byவிஷா

May 23, 2024

தமிழகத்தை ஒட்டி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
வட தமிழகம் மற்றும் தெற்குஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி தற்போது உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, 24-ம் தேதி (நாளை) காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு, மேலும்வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து, வடகிழக்கு, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ம் தேதி மாலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25 முதல் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இன்று தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் ஆழியாரில் 15 செ.மீ., திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் 14 செ.மீ., அமராவதி அணையில் 12 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 9 செ.மீ.,கோவை மாவட்டம் மக்கினம்பட்டி, வாரப்பட்டியில் 8 செ.மீ.,கன்னியாகுமரி, குளச்சல், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 7 செ.மீ. மழை பதிவாகிஉள்ளது.
மே 25, 26-ம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 25-ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.