திண்டுக்கல் மாநகராட்சி உட்பட மாவட்டத்திலுள்ள 5 ஒன்றியங்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை நவம்பர்-22 வரை நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் காவிரி ஆற்றில் புதுப்பாளையம் தலைமை நீரேற்று நிலைய பகுதியில் இரு குடிநீர் கிணறுகள் அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் வெள்ளியணை, குஜிலியம்பாறை வழியாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளுக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. வழியிலுள்ள குஜிலியம்பாறை, வேடசந்துார் உள்ளிட்ட 5 ஒன்றிய பகுதிகள், பாளையம், எரியோடு, வடமதுரை உள்ளிட்ட 7 பேரூராட்சி பகுதிகளுக்கும் காவிரி குடிநீர் விநியோகம் நடக்கிறது.

புதுப்பாளையம் நீரேற்று நிலையத்திலிருந்து வெள்ளியணை நீரேற்று நிலையம் வரை ஆயிரம் மீட்டர் நீளத்திற்கு உடைப்பு ஏற்பட்டதால் அதை மாற்றி அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இதேபோல் கரூர் புதுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் இதுவரை செயல்பட்டு வந்த 175 எச்.பி., குடிநீர் மின் மோட்டார் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிதாக பவர்புல்லான 425 எச்.பி., மின் மோட்டார் பம்புகள் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நவ., 16 முதல் 22 வரை காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.





