திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை,வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவரும் நடிகருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நிர்வாகிகள் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அக்கட்சியைச் சேர்ந்த நிலக்கோட்டையைச் சேர்ந்த நிர்வாகிகள் இருவர் திமுக கட்சி கொடியின் நிறமான கருப்பு,சிவப்பு நிறத்தில் திருடர்கள் முன்னேற்ற கழகத்தை அரசியலில் இருந்து அகற்ற வந்த அண்ணா என, த.வெ.க.தலைவர் விஜய் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரது படங்களுடன் அவர்களது படங்களையும் போட்டு பள்ளப்பட்டி, அம்மையநாயக்கனூர், சிலுக்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்,
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் த.வெ.க.நிர்வாகிகள் மீது நிலக்கோட்டை, அம்மையநாயக்கனூர், வத்தலக்குண்டு ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் பேரில் தவெக-வினர் இருவர் மீது வழக்கு பதிவு செய்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர்,நிலக்கோட்டையை அடுத்த பள்ளப்பட்டி அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (43) என்பவரை கைது செய்துள்ளனர்.மேலும் நிலக்கோட்டை அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த ராமரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி திமுகவினர் இடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



