• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பஸ் – கார் மோதி விபத்தில்
3 மாணவர்கள் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள் மகன் கீர்த்திக் (வயது 23). இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும் கீர்த்திக் தனது காரில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்களான நாலாட்டின்புத்தூரை சேர்ந்த பாலமுருகன் மகன் அஜய் (23), வானரமுட்டி வெயிலுகந்தபுரத்தை சேர்ந்த உதயகுமார் மகன் செந்தில்குமார் (24), வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த அழகர்சாமி மகன் அருண்குமார் (21), ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் விக்னேஷ் (22) ஆகியோரை தனது காரில் அழைத்துச்சென்றார். காரை கீர்த்திக் ஓட்டினார்.
கோவில்பட்டி அருகே அய்யனேரி பகுதியில் உள்ள மேம்பாலத்தில் கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அதே வழியில் எதிரே கோவில்பட்டியில் இருந்து ஜமீன்தேவர்குளம் நோக்கி தனியார் டவுன் பஸ் வந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் காரும், பஸ்சும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரும், பஸ்சும் சிறிது தூரத்தில் இழுத்து செல்லப்பட்டது. கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் கீர்த்திக், அஜய், செந்தில்குமார் ஆகியோர் காரில் அமர்ந்தபடி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். அருண்குமார், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி (65) என்பவரும் காயம் அடைந்தார்.