• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பாஜக-வின் உருட்டல்கள் இந்த தேர்தலில் எடுபடாது: அமைச்சர் பிடிஆர் பேச்சு :

ByN.Ravi

Apr 13, 2024

மதுரை மாநகர் 59,60 வது வார்டு எல்லீஸ் நகர், வைத்தியநாதபுரம், போடி லைன் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணியின் மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு ஆதரவு கேட்டு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசுகையில், தொகுதி மக்களுக்காக ஐந்தாண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்றாண்டுகளாக அமைச்சராகவும் தான் நிறைவேற்றிய திட்ட பணிகளை பட்டியலிட்டார். மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் மட்டும் தொகுதி மேம்பாட்டு நிதியில் 239 பணிகள் 22 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளதாக கூறிய அவர், எல்லீஸ் நகர் பகுதிக்கு மட்டும் 31 பணிகள் 2 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுள்ளதாக கூறினார். ஆறு மாதத்திற்கு ஒரு முறை தாம் வெளியிடக்கூடிய செயல்பாட்டு அறிக்கை இல்லம் தேடி வருகிறதா என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பிய அவர், மாநில அளவில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள மக்கள் நல திட்டங்கள் ஆன கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணத் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் ஆகியவற்றின் செயலாக்கம் மற்றும் விளைவுகள் குறித்து விரிவாக உரையாற்றினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்களில் ஒரு சதவீதம் கூட ஒன்றிய பாஜக அரசு அத்தனை அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டிய அவர் உலகத்திலேயே தாங்கள்தான் பொருளாதார மேதை என்பது போல் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி விட்டதாக பொய்யான தகவல்களை பொதுமக்களிடையே உருட்டுகின்றனர். இந்த உருட்டல்கள் எல்லாம் எதிர் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எடுபடாது. எப்படி கடந்த சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல் மாநகராட்சி தேர்தல் என அனைத்திலும் தந்த வெற்றியை போல் இந்த தேர்தலிலும் சு.வெங்கடேசனுக்கு வாக்களித்து மக்கள் வெற்றியடைய செய்வார்கள் என தான் நம்புவதாக கூறிய அவர், ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு ஒரு நாள் இந்த செயல் திறனற்ற பாஜக அரசு நீடித்தால் ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கவே முடியாது என கூறினார்.
போடி லைன் பகுதி மக்களின் நீண்ட கால பிரச்சனையான பட்டா பிரச்சனை குறித்து விரிவாக பேசிய அமைச்சர், அதற்கு பட்டா பெற்று தர முடியாத காரணம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் அந்த நிலம் இருப்பதாகவும் வெறும் தடையின்மை சான்றிதழை மற்றும் பெற்றுவிட்டு எந்த ஒரு திட்ட பணியை நிறைவேற்ற இயலாது என்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அந்த நிலத்தை கொண்டு கொண்டு வந்தால் மட்டுமே எளிதாக பட்டா பெற முடியும் என கூறினார்.
தேர்தல் பரப்புரையின் இடையே ஒரு பெண் குழந்தைக்கு வெற்றிச்செல்வி என, பெயர் சூட்டினார். கல்பனா சாவ்லா விருது பெற்ற மாற்றுத்திறனாளி தீபா அமைச்சர் பிடிஆர் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைவேற்றி வரும் திட்ட பணிகளுக்காக பாராட்டு தெரிவித்தார்.