• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

பாஜக சவுதாமணியை வறுத்தெடுத்த உயர்நீதிமன்றம்.. ஜாமீன் மனு தள்ளுபடி

மதக்கலவரத்தை தூண்டும் வகையிலும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் ட்விட்டர் பதிவை வெளியிட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடிசெய்த சென்னை உயர் நீதிமன்றம், சமுதாயத்தில் உயர் இடத்தில் இருக்கும் படித்தவரே இதுபோன்ற தவறை செய்யலாமா? என கேள்வி எழுப்பியுள்ளது.

சமீபத்தில் மர்மநபர் ஒருவர் இரு மதத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு மதத்திற்கு ஆதரவாகவும், ஒரு மதத்திற்கு எதிராகவும் கருத்தக்களை பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை தமிழ்நாடு பா.ஜ.க.வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும் சவுதாமணி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து “தைரியமா? விடியலுக்கா?” என்றும் கருத்து பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, மதக்கலவரத்தை தூண்டும் வீடியோவை பகிர்ந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ் சவுதாமணி மீதான புகார் தொடர்பாக, மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சவுதாமணி பதிவிட்ட வீடியோவால் மதக்கலவரம் தூண்டப்படும் எனபதை உறுதி செய்த காவல்துறையினர் அவர் மீது கலகம் செய்ய தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, மனுதாரர் மீது பதிவு செய்யப்பட வழக்கில் புதிதாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கில. தனக்கு முன் ஜாமீன் கோரி சவுதாமணி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சமுதாயத்தில் உயர் இடத்தில் இருக்கும் படித்தவரே இதுபோன்ற தவறை செய்யலாமா? என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.