ஒட்டன்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதி தவெக கட்சியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவரின் சாதி பெயரை கூறி அடித்து உதைத்த பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் அழகுப்பட்டியைச் சேர்ந்த தவெக தொண்டரும், டிராக்டர் டிரைவருமான முருகேசன் (வயது 37) நேற்று இரவு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டிக்கு வந்துவிட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்வதற்காக மோட்டர் சைக்கிளில் புறப்பட்டார்.
பழனி – திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நாகனம்பட்டி புறவழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பாரதி என்பவர் ஓட்டி வந்த காரை எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த முருகேசன் கீழே விழுந்து காயம் ஏற்பட்டது.
காயத்துடன் எழுந்த முருகேசன் பார்த்து காரை ஓட்டி வர வேண்டாமா? இப்படி நடந்து விட்டது என்று கேட்டுள்ளார்.
அதற்கு காரை ஓட்டி வந்த பாஜக நிர்வாகி பாரதி, முருகேசனை பட்டியலின சாதியின் பெயரை கூறி தரக்குறைவாக பேசி நான் யார் தெரியுமா பாஜக நிர்வாகி என்று கூறி முருகேசனை அடித்து உதைத்துள்ளார்.
அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து காயம் அடைந்த முருகேசனை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து புகாரின் பேரில் ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தொண்டர் மீது காரை மோத விட்ட பாஜக நிர்வாகி பாரதி திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சருமான அர.சக்கரபாணியை பற்றி சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் மோட்டர் சைக்கிள் மீது காரை மோத விட்டு பிரச்சனையில் பாஜக பிரமுகர் பாரதி சிக்கிக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



