• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தவெக தலைவர் விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்பின் பின்னணி

Byவிஷா

Feb 11, 2025

தவெக தலைவர் நடிகர் விஜய்யுடன், பிரசாந்த் கிஷோர் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021ல் திமுக பெற்ற இமாலய வெற்றிக்கு பின்புலமாக செயல்பட்டவர் ஐபேக் நிறுவனரான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். ஆனால், திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற சில விரும்பதகாத நிகழ்வுகளை அவர் விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பென் நிறுவனம் மூலமாகவே தேர்தல் பணிகள் செய்யப்பட்டன. அதன் பலனாக 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக, ராபின் சர்மா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. அதுபோல அதிமுகவும் சில நிறுவனங்களுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐபேக் நிறுவனத்தலைவர் பிரசாந்த் கிஷோர், தவெக தலைவர் விஜய் சந்திப்பு நடைபெற்றுள்ளது. திமுகவை விமர்சனம் செய்ததற்காக விசிகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதவ் அர்ஜுனா, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், அவரது ஆலோசனையின் பேரில், தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரசாந்த் கிஷோர் ஏற்கெனவே திமுகவுக்கு வியூகங்களை வகுத்து கொடுத்து திமுகவின் வெற்றிக்கு பங்காற்றியுள்ளார். மேலும் தேசிய அளவில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தனது ஐபேக் நிறுவனம் மூலம் வியூகம் வகுத்து கொடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக வியூகங்களை வகுக்க அதிமுக சார்பில் பிரசாத் கிஷோரை பேசி முடித்திருப்பதாக கூறப்படும் நிலையில், விஜய், பிரசாந்த் கிஷோர் இடையிலான சந்திப்பு, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தவெக கட்சிக்கு தேர்தல் ஆலோசனை, பிரசார வியூகங்களை வழங்க பிரசாந்த் கிஷோர் ஒப்புதல் தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எப்படியிருக்கும் என பிரஷாந்த் கிஷோரிடம் விஜய் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, ஜான் ஆரோக்கியசாமி, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.