• Mon. Apr 29th, 2024

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை – போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்…

ByKalamegam Viswanathan

Dec 22, 2023
மதுரை பசுமலை பணிமனையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 71 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், 71 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் ஓட்டுனர் பயிற்சி கையேடு வழங்கி பேசும் போது..,

தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்கள் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கருணாநிதியால், துவக்கி வைக்கப்பட்டது. அதனால், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமூக பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்து வருகிறார்கள். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இருபத்தி இரண்டு ஆயிரத்திற்கும் (22,000) அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மலை கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்கும் பொதுமக்களின் வசதிக்காக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அனைத்து துறைகளிலும் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக போக்குவரத்துத் கழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பணியின் போது இயற்கை எய்திய பணியாளர்களின் குடும்பத்திற்கு வாரிசு பணி நியமனம் செய்ய உத்தரவிட்டதின் பேரில், அனைத்து போக்குவரத்து கழகத்திலும் மண்டல வாரியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மதுரை மண்டலத்தில் 21 பணியாளர்களுக்கும், திண்டுக்கல் மண்டலத்தின் 37 பணியாளர்களுக்கும், விருதுநகர் மண்டலத்தின் 13 பணியாளர்களுக்கும் ஆக மொத்தம் மதுரை கோட்டத்தில் 71 பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. கடுமையான நிதி நெருக்கடியிலும் தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது நீங்கள் கழகத்திற்கு கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள இடத்திற்கு புதிதாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு தேர்வானையம் மூலம் நிரப்பப்பட உள்ளன. தொடர்ந்து மற்ற போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். தற்போது போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கினாலும் தமிழக முதலமைச்சர் , புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு ஆணையிட்டதை தொடர்ந்து, அடிச்சட்டங்கள் கொள்முதல் செய்யப்பட்டு கூண்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும் ,பணி நியமனம் பெற்ற பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பொறுப்புணர்வுடனும், பொதுமக்களிடத்தில் அன்பாகவும் பணிபுரிய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சியில், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி , தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஏ.ஆறுமுகம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்துக் கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *