முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் வழக்கம் போல் ஆதரவாளர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.
எஸ்.பி .வேலுமணி கடந்த அதிமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் தற்போது அதிமுகவின் கொறடாவாகவும் , தலைமை நிலைய செயலாளராகவும் , கோவை புறநகர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.கடந்த அதிமுக ஆட்சியில் கிராமப்புறங்களில் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் சுமார் 500 கோடி முறைகேட்டில் ஈடுபட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் கோவையில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீடு, அவருக்கு நெருக்கமானோர் வீடு என கோவையில் மட்டும் 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல சென்னையில் அம்பத்தூர், புரசைவாக்கம் உள்ளிட்ட 10 இடங்களிலும் ,திருச்சி, செங்கல்பட்டு ,தாம்பரம் , ஆவடி ஆகிய இடங்களிலும் மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்தனர். தொணடர்களை அப்புறப்படுத்த போலீசார் முயன்ற நிலையில் அங்கு தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.