• Sun. Mar 8th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

இளைஞர் மீது வன்கொடுமை செய்த சம்பவம்

ByP.Thangapandi

Jan 19, 2025

உசிலம்பட்டி அருகே பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்தும், அடித்து துன்புறுத்தியும் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு பதிவு செய்ய காலதாமதம், இதுவரை கைது நடவடிக்கை கூட இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பட்டியலின இளைஞர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு டிரம்ஸ் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார்.

இவர் கடந்த புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழாவின் போது வேட்டியை மடித்துக் கட்டி சென்றதாகவும், வேட்டியை இறக்கி கட்டிக் கொண்டு செல்லுமாறு மாற்றுச் சமுகத்தைச் சேர்ந்த கிஷோர் என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதாகவும், தொடர்ந்து நடைபெற்ற பிரச்சனைகளின் காரணமாக பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் பயந்து கேரளாவிற்கு வேலைக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த இந்த இளைஞரை அதே ஊரைச் சேர்ந்த கிஷோர், உக்கிரபாண்டி, பிரம்மா, சந்தோஷ், நிதிஸ், மணிமுத்து என்ற 6 பேர் கடத்தி சென்று கண்மாய் பகுதியில் வைத்து சுமார் 20க்கும் மேற்பட்டோர் பட்டியலின இளைஞரை தாக்கி, அனைவரின் காலில் விழுந்து மன்னிப்பு கோர வேண்டும் எனவும், சிறுவர்களை பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழிக்க வைத்து வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியதில் தலை, கழுத்து பகுதியில் காயமடைந்து மயங்கி கிடந்த இளைஞரை அவரது பெற்றோர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த சூழலில், உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமாரிடம் புகார் அளித்தும் மூன்று நாட்களாக எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரது உறவினரான வழக்கறிஞரும், தீண்டமை ஒழிப்பு இயக்க நிர்வாகியுமான தெய்வம்மாள் முயற்சியில் கடத்தி சென்று சித்திரவதை செய்த 6 பேர் மீது எசிஎஸ்டி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் அவர்களை கைது செய்ய கோரியும், சட்டங்களை கடுமையாக்கி இது போன்ற வன்கொடுமைகள் நடைபெறாத வண்ணம் பட்டியலின மக்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.