உசிலம்பட்டியில் தெருவில் நடந்து சென்ற போது விஷப்பாம்பு கடித்ததில் விவசாய கூலி தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய பின்புறம் வசித்து வருபவர் மாரிக்காளை., விவசாய கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, வீட்டின் அருகே தெருவை கடந்து சென்ற 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பை இருளில் தெரியாமல் மிதித்துள்ளார். அப்போது விஷப்பாம்பு மாரிக்காளையை கடித்ததில் படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் அதிகமாக பரவியுள்ளதாக கூறி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.,
மேலும் விவசாய கூலி தொழிலாளியை விஷப்பாம்பு கடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது., இச்சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் நிகழ்விடத்திற்கு நேரில் வந்து விஷப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.