உசிலம்பட்டியில் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்திற்கு அதிமுக நிர்வாகள் ஆதரவு தெரிவித்தனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையில் உள்ள 94 பேருந்துகளில் தினசரி 68 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் காலை 5 மணி முதல் 7 மணி வரை சுமார் 42 பேருந்துகள் தொ.மு.ச தொழிற்சங்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களால் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து அதிகப்படியான பேருந்துகள் வெளியேறி விட்டது என கணக்கு காட்டுவதற்காக ஒரே ஓட்டுநர் 6 பேருந்துகளை பணிமனையிலிருந்து எடுத்து செல்வதாக குற்றம் சாட்டி, போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பேருந்தை எடுத்து செல்ல வந்த ஓட்டுநர்களுடன் மற்றும் பணிமனை மேலாளரிடம் காலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் போக்குவரத்து பணிமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக உசிலம்பட்டியில் அதிமுக சார்பில் நகரச்செயலாளர் பூமாராஜா, மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் துரைதனராஜ், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர்.