வேடசந்தூர் அருகே பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக பட்டாசு வெடித்த
அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவம் உள்ளிட்ட 6 பேர் மீது போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் வி.பி.பி.பரமசிவம் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து இன்று காலை 11: 00 மணியளவில், வேட்பாளருக்கு வரவேற்பு அளிப்பதாக அதிமுக., உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர், குஜிலியம்பாறை ஒன்றிய அலுவலகம் அருகே திண்டுக்கல் – கரூர் மாநில நெடுஞ்சாலையில்
கூடினர்.
அதிமுக வேட்பாளர் டாக்டர் பரமசிவம் குஜிலியம்பாறை வந்ததை தொடர்ந்து,
கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து அவரை வரவேற்றனர்.
ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலமாக சென்று ஆங்காங்கே பட்டாசுகளை வெடித்ததில் அதிக புகை ஏற்பட்டு பொதுமக்கள் மூச்சு விட சிரமப்பட்டனர். இதனால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் திரவியராஜ் புகாரின் பேரில் அதிமுக., வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம், குஜிலியம்பாறைஒன்றிய செயலாளர்கள் மலர்வண்ணன், பெருமாள், பாளையம் பேரூர் செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட 6 பேர் மீது உரிய அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்தல், அனுமதியின்றி கூட்டம் கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்
கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்தார்.




